
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான அந்த அழகிய கோவா கடற்கரையில் ஒவ்வொரு சீஸனுக்கும் தகுந்தவாறு பனிச் சிற்பம், ஓவியம் போன்ற போட்டிகள் நடக்கும். இந்த முறை கற்கள், பாறைகளைக் கொண்டு அவரவர்க்குப் பிடித்தமான உருவங்களை வடிவமைக்கும் போட்டி.
பல்வேறு வடிவமுள்ள பாறைகளும், பல வண்ணப் பாறைகளும் கற்களும் அங்குக் குவிக்கப் பட்டிருந்தன. அவரவர் செய்யும் சிற்பங்களுக்குத் தகுந்த காரணத்தைச் சொல்ல வேண்டும் என்பது போட்டியின் முக்கிய நிபந்தனை.
இரண்டு மீனவப் பெண்கள் பாறையின் மீது அமர்ந்திருப்பதைப் போன்று தத்ரூபமாக வடிவமைத் திருந்தான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த சூசை. அவர்களருகில் கூடைகளில் நிஜ மீன்களும், நண்டும் வாங்கி வைத்திருந்தான்.
“இப்படியோர் சிற்பத்தை வடிவமைக்க என்ன காரணம்?” நடுவர் கேட்க,
நான் சிறுவனாக இருக்கையில் என்னிரு தமக்கைகளும் கன்னியாகுமரி கடற்கரையில் இப்படித்தான் அருகருகே அமர்ந்தபடி மீன் வியாபாரம் செய்வார்கள். 2004 ல் சுனாமி வந்தபோது பேரலைகளால் அவர்களிருவரும் என் கண் முன்னே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பல வருடங்கள் ஆன போதும் அவர்களை நினைக்கும் போதெல்லாம் இந்தக் காட்சிதான் என் நினைவுக்கு வரும்” என்றவன் கண்களில கடலுக்குப் போட்டியாக உப்புநீர் நிறைந்திருந்தது.
123

சூப்பர் விஜி