
(1)
அயர்வை அறுக்கும் அன்பு மொழியுடன்
தயக்கம் போக்கும் மா மருந்தாய்
வியக்கும் வண்ணம் இருக்கும் என்னவர்;
வேறென்ன வேண்டும் எனக்கு?
(2)
விரும்பும் வண்ணம் இரு; என்றே
கரும்பனைய சொல் சொல்லும் மகள்;
நிர்ப்பந்தம் இல்லா இனிய உறவு;
வேறென்ன வேண்டும் எனக்கு?
(3)
நா புரள்வது சற்றே ஏறக்குறைய
இருந்தாலும், கைவிடாது என்னை, தூக்கியே
நிறுத்தும் கலைமகள் கருணையில் நானிருக்க;
வேறென்ன வேண்டும் எனக்கு
(4)
தளைகள் குறைந்த என் முதுமையில்
அலைபாயும் மனதை நிலை நிறுத்த
சலியாது நா சொல்லும் திருவாசகம்:
வேறென்ன வேண்டும் எனக்கு?
(5)
விரும்பிய பணியில் நீண்ட காலம்
இருந்தே நான் இயங்கி வந்தேன்.
குற்றமற்ற பணியில் அயர்வும் பெற்றபின்
வேறென்ன வேண்டும் எனக்கு?
