சசிகலா விஸ்வநாதன்/வேறென்ன வேண்டும் எனக்கு

(1)
அயர்வை அறுக்கும் அன்பு மொழியுடன்
தயக்கம் போக்கும் மா மருந்தாய்
வியக்கும் வண்ணம் இருக்கும் என்னவர்;
வேறென்ன வேண்டும் எனக்கு?

(2)

விரும்பும் வண்ணம் இரு; என்றே
கரும்பனைய சொல் சொல்லும் மகள்;
நிர்ப்பந்தம் இல்லா இனிய உறவு;
வேறென்ன வேண்டும் எனக்கு?

(3)

நா புரள்வது சற்றே ஏறக்குறைய
இருந்தாலும், கைவிடாது என்னை, தூக்கியே
நிறுத்தும் கலைமகள் கருணையில் நானிருக்க;
வேறென்ன வேண்டும் எனக்கு

(4)
தளைகள் குறைந்த என் முதுமையில்
அலைபாயும் மனதை நிலை நிறுத்த
சலியாது நா சொல்லும் திருவாசகம்:
வேறென்ன வேண்டும் எனக்கு?

(5)

விரும்பிய பணியில் நீண்ட காலம்
இருந்தே நான் இயங்கி வந்தேன்.
குற்றமற்ற பணியில் அயர்வும் பெற்றபின்
வேறென்ன வேண்டும் எனக்கு?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன