தொலைந்துபோன பாரதியார்/ அழகியசிங்கர்

            

நண்பரொருவர் பேச்சைக் கேட்டு
எழுதிப்பார்த்தேன் பாரதியாரை
துடிக்கும் மீசையுடன்
என் முன்னால் நின்றார் பாரதியார்
எங்கே ஒளிந்திருக்கிறீர்
என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்
சிரித்தபடி மறைந்து விட்டார்

போனில் படித்தபோது
நண்பர் தலை ஆட்டி
'நன்று நன்று' என்றார்
கொண்டு வருவார்
துடிப்புடன்
பாரதியார் பற்றி எழுதிய
பலர் கவிதைகளையெல்லாம்
சேர்த்தென்றால்
திட்டத்திலிருந்து விலகி விட்டார்

அப்போது எழுதிய
அந்தக் கவிதையை
எங்கே வைத்தேன்
ஃபைல்களைப் புரட்டி
பார்த்தாலும் கிட்டவில்லை
பாரதி என் பாரதி
நீண்ட நோட்டில்
எழுதிப் பார்க்கும்
கவிதைகள் பலவற்றை
சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு
இருந்தாலும்
பாரதியாரைப் பற்றி
நானெழுதிய கவிதையை
காணவில்லை ஏனோ..
எங்கே ஒளிந்துகொண்டார்?
தெரியவில்லை
வாவென்றால் வருவாரா?
தெரியவில்லை

அவர் வரிகளிலிருந்து
கயிறு பிடித்து
இறங்கியிருக்கிறோம்
வழிதெரியாமல்
திகைத்த 
எங்களுக்கு
வரம்கொடுத்து
வரி தந்த மேதையவர்

அவரை வைத்துப் படம் எடுக்கிறார் பலர்
பாட்டுப்பாடப் பிய்த்துக் கொண்டனர்
அவர் பாடல்களை
நானோ கவிதை எழுத முயல்கிறேன்

                                     (பாரதியார் பிறந்த  தினம் : டிசம்பர்  11)

One Comment on “தொலைந்துபோன பாரதியார்/ அழகியசிங்கர்”

  1. பாரதியாரைப் பற்றி நீங்கள் எழுதிய கவிதை காணாமல் போனால் ஒன்றும் நஷ்டமில்லை. அவர்தான் உங்கள் எல்லாக் கவிதை வரிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாரே!

Comments are closed.