
வேளச்சேரி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மஞ்சுளாவைப் பார்த்ததும் வசீகர் ஒரே தாவாகத் தாவி அவளது இடுப்பில் ஏறிக் கொண்டான். பார்த்துக் கொண்டிருந்த சாருமதிக்கோ தன் மகன் அத்தையை மறக்கவில்லை என்ற சந்தோஷம். சாருதான் முதலில் வாயைத் திறந்தாள்.
“எப்படியிருக்கே மஞ்சு? தரமணிலருந்தா இங்கே பர்ச்சேஸ் பண்ண வாரே?”
“ஆமாண்ணி. அண்ணன் எப்படியிருக்கான்?எங்கப்பா, அம்மா? “
” நாங்க எல்லாருமே நல்லாருக்கோம். உங்கப்பாக்குத்தான் இன்னும் கோபம் குறையல. அவளுக்குப் பெற்ற அப்பனை விடக் காதலன்தான் பெரிசோன்னு தெனமும் கத்திட்டிருக்காரு. சரியா சாப்பிடுவதில்லை.”
” எனக்குமே சாப்பாடு இறங்க மாட்டேங்குது. பெரிய ஷாக்காப் போயிடுச்சே. எங்கிட்ட அவ்ளோ பாசமாயிருப்பாரு அப்பா. நான்னா உயிரு. ஆனா காதல் விஷயத்தில சினிமா டயலாக்கா பேசுறாரு. ம்ம்ம். ஆனா வசீகரைத் தூக்கியதும் பாதி கவலைங்க ஓடியே போச்சு. அப்படியே அப்பா சாடை இவன். நான் எங்கப்பாவைத் தொடுற மாதிரியே இருக்கு. உடம்புக்குள்ளே ரத்தமெல்லாம் பாலா மாறிப் போன உணர்வு. இவனை அடிக்கடி தூக்கணும் அண்ணி. வாரா வாரம் இதே நேரம் இங்கே மீட் பண்ணுவோம்.” கண்களில் காவிரி உற்பத்தியாக வசீகர் கன்னத்தில்
முத்தமழை பொழிய ஆரம்பித்தாள் மஞ்சுளா. இன்னும் சில நாட்களுக்கு இது தாங்கும்.
127
