
‘கற்பக விருட்சம் சிறார் காப்பகம் ‘, தன் ஆறு வயது மகன் முகிலுடன் உள்ளே நுழைந்தாள் அனுபமா.
தோட்டத்தை சுற்றிப் பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து சற்றே அதிர்ந்தாள்.
“சிவகாமி நீ இங்கே என்ன செய்யறே?”
“வேலை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்தில் வர்றேன்.”
“கண்ணா, எப்படிடா இருக்கே. முகிலனைத் தன்னருகே இழுத்து அணைத்து முத்தமிட்டாள் சிவகாமி.”
“எப்படி இருக்கீங்க அனு, நீங்க எங்க இந்தப் பக்கம், வீட்டுக்காரர் நல்லா இருக்காரா?”
சட்டெனக் கலங்கியவள், அவர் ஒரு விபத்துல இறந்துட்டாரு.காப்பீட்டுத் தொகையாக வந்த பணத்தையெல்லாம் பறிச்சிக்கிட்டு விரட்டிட்டாங்க.
இவனை எங்காவது சேர்த்துட்டு வந்தா கூடப் பொறந்த கடனுக்காக அடைக்கலம் தர்றேங்கறாரு அண்ணன்.
“என் புருஷன்கிட்ட முகிலனைக் கொடுக்க நிறைய பணம் வாங்கினாரே உன் வீட்டுக்காரர்,அப்புறம் நீ ஏன் இப்படி?”
“எனக்கு ஒரு ஆண்சிங்கத்தைப் பெத்துத் தரத் துப்பில்லேன்னு சொல்லி மூணு பொட்டைப் புள்ளைங்களோட அடிச்சு விரட்டிட்டாரு அனும்மா. அன்னையிலேருந்து நாங்க இங்கதான்.”
இருவர் விழிகளும் கலங்க, அவர்கள் விழிகளைத் தன் பிஞ்சு விரல்களால் துடைத்த முகிலன், கவலைப்படாதீங்க நா இருக்கேன் உங்க ரெண்டு பேருக்கும்.
அனுபமாவும், முகிலனின் வாடகைத் தாயான சிவகாமியும் அந்த மழலையின் பாசத்தில் நெகிழ்ந்தனர்.
வார்த்தைகள்:125
