"நீ சொல்வதை ஏற்க முடியாது ராணி. உனக்கு அக்கா குழந்தைன்னா ,எனக்கு அண்ணன் வாரிசு எங்க வீட்டில் தான் வளரணும். நீயும், உங்க அம்மா அப்பாவும் அப்பப்போ பார்க்கலாம் . ஆனால் குழந்தையை உங்க கிட்ட விட முடியாது" என்று காட்டமாகச் சொன்னாள் அக்காவின் நாத்தனார் வேணி.
என் அக்காவும், அத்தானும் வழக்கம் போல் அப்பா அம்மாவிடம் குழந்தையைக் காட்ட ஞாயிறு அன்று பைக்கில் எங்க வீட்டுக்குக் கிளம்பி வரும்போது ஒரு திருப்பத்தில் லாரி மோதி அந்த இடத்திலேயே மரணிக்க, குழந்தை தள்ளிப் போய் விழுந்ததில் பிழைத்து விட்டது. காரியங்கள் முடிந்து அதை யார் வைத்துக் கொள்வது என்பதில் தான் பிரச்சினை.
" ஏம்மா வேணி ,நீ மணமாகி அடுத்த ஊரில் உன் மாமனார், மாமியார், குழந்தைகளோடு இருக்கே. உன் குடும்பத்தை விட்டு உன்னால் வர முடியுமா இதைப் பார்க்க?."
"இந்தக் குழந்தையை வளர்க்கும் அளவு எனக்கோ, உங்க அம்மாவுக்கோ தள்ளாத வயதில் உடலில் தெம்பும் மனசில் தைரியமும் இல்லை. நல்லா இருந்த மகனையும், மருமகளையும் அநியாயமா பறி கொடுத்துட்டு நிற்கிறோம்.
ராணிக்கு மருமகள் ஜாடை இருப்பதால் அது அம்மாவைத் தேடி அழாது. அவங்களுக்குத் தேவையெனில் நாங்க உதவி செய்வோம். வீம்புக்குப் பேசாதே " என்றார் அவள் அப்பா