
பரந்தாமனைக் கண்டால் அவரது மகன் கோபிக்கு துளியும் பிடிக்காது.
எந்த வேலைக்கும் போகாமல், சாமியார் போல வேடம் தரித்துக்கொண்டு, வீட்டிலும், கோவில் வளாகத்திலும் மாறிமாறி பொழுதைக் கழிப்பவரை எந்த இளைஞனுக்குத் தான் பிடிக்கும்?
அத்தோடு வீட்டில் இருக்கும் நேரங்களில், சுருட்டு பழக்கம் வேறு.
அம்மா இருந்தவரை அவளே வீட்டுக்காக உழைத்து, ‘ஒரு பாதுகாப்புக்காக’ பரந்தாமனை உடன் வைத்திருந்தாள்.
அம்மா இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. கோபி, பரந்தாமனிடம் முடிவாக சொன்னான்.
“இந்த போலி வேஷங்களையெல்லாம் இனியாவது கலைத்து எறியுங்கள். முதல் வேலையாக அந்த சுருட்டை விடுங்கள். அப்போ தான் உங்களுக்கு இங்கே சாப்பாடு.”
“இது தான் என் கடைசி இழுப்பு” என்று விரல் உயர்த்தி சொன்னவர், ஆழமாக ஒருமுறை அதை புகைத்தார்.
நெஞ்சு பிசைய, கழுத்து கோணிக்கொள்ள, அதே நிலையில் உயிரை விட்டார்.
(89 வார்த்தைகள்)
