
தெரு முனையில் பிள்ளையார் கோயில். பிள்ளையாரைச் சுற்றி ஆலமரம்.
சக்தி அங்கே நின்று கொண்டு வேண்டிக் கொள்வான். மனம் உருகி. அவன் பிரார்த்தனை எல்லாவற்றையும் விநாயகர் செவிசாய்த்து நிறை வேற்றுவதாக அவனுக்கு நினைப்பு. அது ஓரளவு உண்மையும் கூட.
ஒரு முறை ஸ்மார்ட் வாட்ச்சை எங்கோ வைத்துவிட்டான். பிள்ளையாரை வேண்டினான். உடனே கிடைத்து விட்டது. இன்னொரு நாள் முகத்தில் போட்டுக்கொள்ளும் கண்ணாடி. ஒரு கல்யாணத்திற்குப் போகும்போதுதான் தேடினான்.
கிடைக்கவில்லை. அன்று கண்ணாடி இல்லாமல்
கல்யாணத்திற்குப் போனான். ஆனால் அடுத்தநாள் கிடைத்து விட்டது.
இப்படி சின்ன சின்ன விஷயங்களைப் பிள்ளையாரிடம் வேண்டிக்கிறான். நடந்து விடுகிறது. இப்போது மேஜரா ஒன்றை வேண்டி கொண்
டிருக்கான். பக்கத்து வீட்டிலிருக்கும் மாலினியைக் காதலிக்கிறான். காலையில் எழுந்தவுடன் தெருவில் அவ முக தரிசனம் கிடைக்கிறதா என்று பார்ப்பான்.
சில சமயம் கிடைக்கும்போது அவளைப் பார்த்துச் சிரிப்பான். அவளும் சிரிப்பாள். அவன் சிரிப்பை அவ தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.
அவளைத் திருமணம் செய்துகொள்ள நினைத்துக் கொண்டிருக்கிறான். அவளிடம் எப்போது சொல்ல வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருக்கிறான். பிள்ளையார் அனுமதி தர வேண்டும்.
ஒருநாள் அவன் பிள்ளையாரிடம் வந்து வேண்டிக் கொண்டிருக்கும் போது, மாலினியும் அங்கு வந்து வேண்டிக் கொண்டாள். அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். அவளும்தான்.
அவள்தான் முதலில் பேசினாள் : “
இந்தப் பிள்ளையார் சக்தி வாய்ந்த பிள்ளையார்.”
‘ஆமாம்’ என்று தலை ஆட்டினான்.
“நான் வேண்டியதை நிறைவேற்றி விட்டார்.”
“என்ன வேண்டினிங்க.”
“எங்க அலுவலகத்தில் பீட்டர் என்பவரைக் காதலிக்கிறேன். அவரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். இதோ எல்லோருடைய சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்கப் போகிறது.”
பிள்ளையார் அவனை ஏமாற்றி விட்டார்.
