
தெருவில் பொம்மை விற்கும் சத்தம் கேட்டு, வாசலில் எட்டிப் பார்த்தாள் மங்களம். இடுப்பில் குழந்தையுடன், தலைமேல் பொம்மை கூடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் கலா.
காலையிலிருந்து பொம்மை விற்பதால் மிகவும் சோர்ந்து போனாள். குழந்தையை மங்களம் வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, பொம்மை கூடையையும் இறக்கி வைத்தாள்.
அம்மா “குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுங்க , ரொம்ப தாகமா இருக்கு” என்றாள்.
மங்களம் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
என்ன பொம்மை இருக்கு ?என்று கேட்டுக்கொண்டே கூடையைப் பார்த்தாள். அவளுடைய கண்கள் அந்த குட்டி தவழ்ந்த கிருஷ்ணன் பொம்மை மீது பட்டது.
“அந்த பொம்மை வேணும் மாம்மா,50 ரூபா தான் எடுத்துக்கோங்க” என்றாள் கலா.
உனக்கு எத்தனை குழந்தைமா?
மூணு குழந்தைங்க மா .ரெண்டு ஸ்கூலுக்கு போயிருக்கு இது சின்னது இதையும் தூக்கிக்கிட்டு தெருத்தெருவா சுத்த வேண்டியிருக்கு. என்ன செய்யறது?
“சரி சரி இந்த கிருஷ்ணர் பொம்மையை உன் கையால கொடு. உன்னோட கைராசி அடுத்த வருஷம் எங்கள் வீட்டிலேயும் குட்டி கிருஷ்ணன் தவழட்டும்.”என்றாள் மங்களம்.
கலா, கிருஷ்ணர் பொம்மையை எடுத்துக் கொடுத்தாள்.
பொம்மையை வாங்கிய மங்களம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தாள்.
அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது கையில் சூலத்துடன் அம்மனாக தெரிந்தது, திண்ணையில் உட்கார்ந்திருந்த கலாவின் சின்ன குழந்தை.
141 WORDS
