
நவராத்திரி விழா வரும் சமயமென்பதால், கடவுள் உருவ பொம்மை விற்பனை செய்யக் கிளம்பினாள் பொம்மி.
தலைச்சுமை போக, இடுப்புச் சுமையாகக் குழந்தையையும் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.
“பொம்மையை விட நீ அழகா இருக்கே. தனியா ஊர் முழுசும் சுத்துற, காலம் கெட்டுக் கிடக்கு. கவனமா இரு.”
பக்கத்து வீட்டுக் கோமதி பாட்டி சொன்னதில் கரிசனமும், கவலையும் தெரிந்தன.
“நான் எங்க தனியா இருக்கேன்? இடுப்புல இருக்கிற என் பிள்ளை உன் கண்ணுக்குத் தெரியலையா?” என்று பொம்மி சிரித்தபடி கேட்டாள்.
குழந்தைக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.
“எங்கம்மாவை யாராவது தொட்டா, இந்த சூலத்தால குத்திடுவேன்” என்று நடித்துக் காண்பிக்க, பெண்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
(73 வார்த்தைகள்)
