
வறண்ட ஆற்று படுகையில்
ஈரடிக்கு கீழிருந்து எடுத்த
ஈர மணல் குவித்து
எங்கள் ஊர் கோவில் போல்
அச்சடித்தாற்போல் செய்து
முடிக்க ஆனது ஆறு நாள்
எங்களுக்கு
பார்த்து ரசித்த சூரியனும் சந்திரனும்
வங்கக்கடலுக்கு ஓடி போய்
அங்கு சுற்றிக்கொண்டிருந்த
மேகங்களிலிடம் சொல்ல
அவைகளும் பார்ப்பதற்கு
வந்து விட்டன.
என் கவலை புரியாத அம்மா
வீட்டில் ஒழுகும் இடங்களில்
பாத்திரம் வைக்க
சொல்கிறாள்
கிராதகி.
