
நித்திலக்கோவை
சதுர்த்தி தினத்தன்று
வாசலில்
பல வண்ணங்களில்
யானையை வரைந்தாள்.
“டேய்,
யானை கருப்பு வண்ணத்தில்தான்டா
இருக்குமென்றேன்.”
“போ… மா” என்றாள்.
சற்று யோசித்துவிட்டு
“நீதானே
காட்டைத் தருவது
யானை என்றாய்?”
“ஆம்” என்றேன்.
“அது நமக்கு
எவ்வளவு க்ரீன்ஸ்,
மல்ட்டி கலர் ஃப்ளவர்ஸ்
கிஃப்ட் தருது தெரியுமா?”
என்றாள்.
அக் கணம்
அவள் வரைந்த
பல வண்ண யானைக்குள்
காடு முளைத்தது.
தெய்வம்
வேறு எங்குமில்லை
என்றே தோன்றியது.
