
“ஒரு அரசு..நாட்டு மக்கலிடம் வரி விதிப்பில் எப்படி நட்னஹ்து கொள்ள
வேண்டும்” என்பதை கீழே குறிப்பிட்டுள்ள புறநானூறு பாடல் சொல்கிறது
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
பாடியவர்: பிசிராந்தையார் – புறநானூறு # 184
உரை :
மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக்
கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை பல நாட்களாக உண்ணும்.
ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால்
, யானை தின்பதை விட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு
அதிகமாகும். அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து
மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருட்களைப்
பெற்றுத் தழைக்கும். ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை
அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல்,
அநியாயமாக வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும்
கெட்டு, தன் நாட்டையும் கெடுப்பான்.
(இந்த அருமையான பாடலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதி பட்ஜெட்
தாக்கல் செய்யும் போது ஒருமுறை மக்களவையில் கூறியது நமக்கு
நினைவிருக்கலாம்)
