யார் கறையன்று என்பார்?/கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 16

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் எப்போதும் வாய்மையின் வழி நின்ற சான்றோர் தவறு செய்தாலும் அது தவறாகவே கொள்ளப்படும். அவர் இதுவரை செய்த நல்ல செயல்களுக்காக அத்தவறு பொறுத்துக் கொள்ளப் பட மாட்டாது என்பதை அழகான உவமையுடன் விளக்குகிறது குண்டலகேசியின் இப்பாடல்.

இதற்கு உவமையாக விண்ணோர் போற்றும் நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானின் கழுத்தில் உள்ளது என்பதற்காக யாரேனும் கறையை கறையன்று என்பரோ? என குறிக்கிறது இப்பாடல்.

இந்நூல் பௌத்த மதக் காப்பியமாக இருந்தாலும் விண்ணோர் போற்றும் நெற்றிக்கண் உடையான் என சிவபெருமானின் சிறப்பைப் பாடுவது நோக்கத்தக்து

“மண்ணுளார் தம்மைப் போல்வார்
மாட்டதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம்
குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த
விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன்மேல்
கறையை யார் கறையன்று என்பார்?”