
மன்னர் சேனை போல மாபெரும் வெள்ளம்
எயினர் வாழும் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி
வயின்வயின் எயிற்றி மாதர் வயிற்று அலைந்துஓடஓட்டி
அயில் முகக்கணையும் வில்லும் வாரிக்கொண்டு அலைக்கும் நீரால்
செயிர்தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே [26]
[எயினர்=வேடர்; அப்புமாரி=அம்புமழை; இரியல் போக்கி=நிலைகுலையச் செய்து; வயின்=வயிறு; எயிற்றி=அடித்து; அயில் முகக்கணை=கூரிய முனை உடைய அம்பு; செயிர்தரும்=துன்பம் தரும்; மானும்=ஒத்திருந்தது]
வெள்ளமானது வேகமாக ஓடி வருகிறது. அப்படி வரும்போது வேடர்கள் வசிக்கும் சிற்றூர்களைத்தன் மழைத்துளிகளாகிய அம்புகளால் நிலைகுலையச் செய்கிறது. தான் செல்கின்ற இடங்களில் எல்லாம் வேடர்குலப்பெண்கள் தம் வயிற்றில் அடித்துக்கொண்டு ஓடச் செய்கிறது. அக்குடியிருப்பில் உள்ள கூரிய முனைகளை உடைய அம்புகளையும் விற்களையும் வாரி அடித்துக்கொண்டு ஓடி வருகிறது. அச்செயல்களால் அவ்வெள்ளமானது பகைவர்க்குத் துன்பம் தருகின்ற வெற்றியைப் பெற்ற மன்னரது சேனையை ஒத்திருந்ததாம்.
