இனிக்கும் தமிழ் -67/டி வி ராதாகிருஷ்ணன்


தண்டலையார் சதகம் – தன் வலி தனி வலி

சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய் தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.


நொந்தவர், பசித்தவர், விருந்தினர், விரகம் உள்ளவர், நோய் வாய்
பட்டவர்..ஆகியோருக்கு மற்றவர்கள் வலி தெரியாது..இது எப்படியெனில்,
சவலைப் பிள்ளை தாயிடம் பால் அருந்தாமல் இருந்தால் அந்த தாயின் மார்பில்
பால் கட்டி தாய் துன்பப் படுவதை அந்தக் குழந்தை எப்படி அறியாதோ அது
மாதிரி.



நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும்
விரகினரும் நோய் உள்ளோரும்
தந்தமது வருத்தம் அல்லால் பிறருடைய
வருத்தம் அது சற்றும் எண்ணார்
இந்துலவும் சடையாரே! தண்டலையாரே!
சொன்னேன், ஈன்ற தாயின்
அந்த முலைக் குத்துவலி சவலை மகவோ
சிறிதும் அறிந்திடாதே!


நொந்தவரும் = நொந்தவர்களும்

பசித்தவரும் = பசித்தவர்களும்

விருந்தினரும் = விருந்தினர்களும்
விரகினரும் = விரகம் கொண்டவர்களும்

நோய் உள்ளோரும் = நோய் உள்ளோரும்
தந்தமது வருத்தம் அல்லால் = தங்களுடைய துன்பம் அல்லாது

பிறருடைய = மற்றவர்களின்
வருத்தம் = வருத்தத்தை

அது சற்றும் எண்ணார் = கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்க மாட்டார்கள்
இந்துலவும் சடையாரே! = நிலவு உலவும் சடையரே (சிவனே)

தண்டலையாரே! = குளிர்ந்த தலையை உடையவரே
சொன்னேன்,= நான் சொல்கிறேன்

ஈன்ற தாயின் = பெற்ற தாயின்
அந்த முலைக் குத்துவலி = பால் கட்டிக் கொண்டதால் மார்பில் வரும் குத்து வலியை

சவலை மகவோ = பால் அருந்தாமல் இருக்கும் சவலைப் பிள்ளை
சிறிதும் அறிந்திடாதே! = கொஞ்சம் கூட அறியாது

                                                    –

One Comment on “இனிக்கும் தமிழ் -67/டி வி ராதாகிருஷ்ணன்”

Comments are closed.