திருக்குறள் சிந்தனை 22/அழகியசிங்கர்

தினமும் ஒரு குறள் படிக்கலாமென்று ஆரம்பித்தேன்.  ஆனால் முடியவில்லை.  ஒரு குறளைப் படிக்க ஐந்து நிமிடம் கூட ஆகாது.  ஒரு முறை அல்ல.  இன்னொரு முறையும் படிக்கலாம்.  உரையாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம். இந்தக் குறளைப் பார்க்கலாம்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

உயிரோடு இருக்கும்போதே பல்வேறு பற்றுகளை எல்லாம் துறந்து  வாழக்கூடியவர்களின் சிறப்பை அளவிட்டுக் கூற முடியாது என்கிறார். அப்படிக் கூற முற்பட்டால் பற்றுகளையெல்லாம் தானாகவே விட விரும்பாதவர்களின் சாதாரணமானவர்களின் மரண எண்ணிக்கையை விடப் பற்றுகளை விட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறார்.
இந்த இடத்தில் திருவள்ளுவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.  அதாவது பல்வேறு பற்றுகளை எல்லாம் துறந்து வாழ்கிறவர்கள் இந்தக் கலிகாலத்தில் இருக்கிறார்களா?  திருக்குறள் காலத்தில் பல்வேறு பற்றுகளைத் துறந்த மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  இப்போது பார்ப்பதே அரிது.  
இதற்கு இணையாக நவீன கவிதை என் கண்ணி6ல் தட்டுப்படவில்லை  ஆனால் துளிகள் என்ற கவிதை இதற்கு இணையாக வருமா என்ற சந்தேகம் எனக்குண்டு.

துளிகள்

மின்னலோடு
மழை பெய்யத் தொடங்கிவிட்டது
எங்கள் ஊரின் ஜனத்தொகை
நாலு லட்சத்து 
75,447 பேர். மதிய நேரம் என்பதால்
சாலையில் அதிகக்
கூட்டம் இல்லை.
4,75,447 துளிகள்
பெய்துகொண்டிருக்கின்றன.

        (மர்ம நபர் - தேவதச்சன் முழுத் தொகுதி) 

One Comment on “திருக்குறள் சிந்தனை 22/அழகியசிங்கர்”

  1. அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய அழகிய சிங்கர் ஐயா, வணக்கம்.
    அந்தக் குறளின் பொருள் அதுவன்று. இவ்வுலகில் பிறந்து, இறந்தோரின் எண்ணிக்கையை எண்ணிச் சொல்ல முயற்சி செய்வதைப் போல, துறவோரின் பெருமைகளை முழுவதுமாகக் கூற முயற்சி செய்வதும் இயலாத செயலாகும் என்பதே அதன் பொருளாகும்.

Comments are closed.