
எந்தக் கவலையுமற்று
நீண்டு கிடக்கிறது
பெரிய மலை.
யாராலும்
நகர்த்தவோ தகர்க்கவோ
முடியாதென்ற
திமிர்கூடத் தென்படுகிறது.
அறமற்றவற்றைத்
தடுக்கும்
லட்சியம்கூட
இருப்பதாகத் தோன்றும்
தன்பலம்குறித்து
எப்போதும் கர்வமெனப்
புலப்படுகிறது
நேர்த்தியாய்.
அதிலேறும் முயற்சியில்
வென்றதாக
இதுவரை தெரிவிக்கவில்லை
எவரும்.
பிரபஞ்ச ரகசியம்
கொட்டிக்கிடக்குமென்று
ஞானிகள் சொல்வது
கூடுதல் சிறப்பு
மேலேறப் பயந்த
சந்யாசிகள்
அடிவாரக் குடிசையமைத்து
அருள்பாலிக்கிறார்கள்
மலையின் திமிர் மாறாது.
கிடக்கும் பசுமை
குருவிகள், மேகச்சல்லாபம்
அருவி,பனிப்புகை
இன்றேல்
அதன் பெயர்
என்னவென
யோசித்ததே இல்லை
எல்லாவற்றையும் போல.

அருமையான கவிதை.மலை நல்ல குறியீடு