மார்கழிக் கவிதைகள்: 17/மீ. விசுவநாதன்

“இனிதான மொழிபேசி”

பனிபோலத் தூய்மையுடன் – மக்கள்
பணிசெய்யும் ஊக்கமுமே வேண்டும்
தனியாளாய் நின்றாலும் – அச்சம்
தவிர்த்திட்ட தீரமுமே வேண்டும்

முனிபோலத் துறவுநிலை கொண்டு
முடிந்தவரை நாவடக்க வேண்டும்
இனிதான மொழிபேசி என்றும்
இயல்பாக இருந்திடவும் வேண்டும்

காசுபணம் என்றலைந்து நாளும்
களவுசெய்து பொய்கூறிக் கொண்டு
தேசத்தைக் குறைகூறும் பேர்க்கு
திட்டமுடன் பதில்கூற வேண்டும் !

கண்ணியமும் பண்பாடும் காக்கும்
காவலராய் நாம்வாழ வேண்டும்
எண்ணமதில் எப்போதும் நன்மை
இறுதிவரை வைத்துயர வேண்டும்
(01.01.2022)

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்