தலைக்கனம்/வளவ. துரையன்

தலைக்கனம்
கடந்த ஆறு மாதங்களாக
எனக்குத் தலைக்கனம்
அதிகமென்கிறார்கள்.

ஆமாம்; நான் கவிஞனன்றோ?
நானே வளர்த்துக் கொண்ட
நளினமான தலைக்கனம்!

எப்பொழுதுமே தலைக்கனம்
எல்லார்க்கும் தொல்லை தரும்.
எனக்குப் புதுவிதக் குழப்பம்

என் மனைவி இரவு முழுதும்
என்னால் உறங்க முடியவில்லை என்றாள்.

ஏனென்று கேட்டேன்
பதில் சொன்னாள்

தலைக்கனமாம் உங்கள்
முடிகாட்டில் குடிகொண்ட
மூன்று குருவிகளும்
இரவு முழுதும் பேசுகின்றன.
ஒரே சத்தம்

சரி, தலைக்கனத்தைச்
சற்று செதுக்கி வைப்போமென
ஓர் அழகு நிலையம் போனேன்;

நான்கைந்து பேர் காத்திருக்க
நான் வாசலில் அமர்ந்தேன்;

சற்று நேரம் கழிந்த்து.
என்பக்கத்தில் வந்து
ஒரு நாயும் பூனையும் அமர்ந்தன.

சற்று நேரம் கழிந்தது.
இன்னும் ரொம்ப நேரம் ஆகுமோ?
நாய் இப்படிக் கேட்டதும்
நான் திடுக்கிட்டுப் போனேன்.

நாய்கூடப் பேசுமா எனக்
கடைக்காரரைக் கேட்டேன்;
அவர் சொன்னார் ஆச்சரியப்படாதீர்
இப்போது கேட்டது
நாயின் குரலன்று
நாயின் குரலில்
பூனைதான் மிமிக்ரி செய்தது