நம்பிக்கையின் காத்திருப்பு/எஸ் வி வேணுகோபாலன்

ஒரு மழைக்கும்
இன்னொரு மழைக்கும் இடையே
கடந்துவிடக் காத்திருக்கிறேன்
ஏதாவது ஒரு மரத்தடியில்

ஒரு விம்மலுக்கும்
ஒரு கேவலுக்கும் இடையே
சமாதானப் படுத்திவிடக் காத்திருக்கிறேன்
யாரேனும் ஒரு குழந்தையின் அருகில்

ஒரு புறக்கணிப்புக்கும்
இன்னொரு நிராகரிப்புக்கும் இடையே
அன்பு துளிர்க்கக் காத்திருக்கிறேன்
எங்கேனும் ஓர் உறவின் மடியில்

ஓர் அராஜகத்திற்கும்
மற்றோர் அநியாயத்திற்கும் இடையே
நீதி விளைந்திடக் காத்திருக்கிறேன், போராடியபடி
எப்போதும் ஓர் அதிகார பீடத்தின் எதிரில்

14 Comments on “நம்பிக்கையின் காத்திருப்பு/எஸ் வி வேணுகோபாலன்”

  1. ஆமாம் , நம்பிக்கை , பொறுமை , விடாமுயற்சி . உன்னையும் அறியாமல் ஷீர்டி சாய்ராம் சொன்னது உன் கவிதையில் வந்து விட்டது ….. விடாமுயற்சி தான் போராட்டம் , காத்திருப்பது தான் பொறுமை . நம்பிக்கை கவிதையின் பொதுக் கருத்து .

  2. ஆஹா… ! அதிகார பீடத்தின் எதிரில்… ! உறுதி . குழந்தையின் விம்மலுக்கு குழையும் கவிஞர் அதிகாரத்தின் ஆநீதிக்கு கொதிக்கிறார். செங்கோலை எதிர்க்கும் உங்கள் பேனா முனையின் கூர்மை உங்கள் சிந்தனையிடம் இருந்து வந்தது.

  3. காத்திருப்பு அருமை…
    இன்னொரு யதார்த்தமான காத்திருப்பு..
    ஜனனத்திற்கும் மரணத்திற்கும்
    இடையே காத்திருக்கிறோம்
    வாழ்ந்து கொண்டு…

  4. அருமை…ஒவ்வொரு காத்திருத்தலின் பரிமாணமும் அழகாக உங்கள் வரிகளில் வெளி வந்திருக்கிறது…..மற்றுமொரு சிறகு உங்கள் மகுடத்தில்

  5. வாழ்க்கை என்பதே காத்திருப்பது தான். காத்திருப்பு சில சமயம் சுகமானதாகவும் சில சமயம் வலி மிகுந்ததாகவும் இருப்பது தான் வாழ்வின் விநோதம்!

  6. ஒரு வழியில் இது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது என்று கொள்வோமா?

Comments are closed.