
நாழிக் கிணற்றில்
தாம்புக் கயிறு சகடையில் இறங்கி
தண்ணீர் சேர்ந்தும் சத்ததில்
பொருநை ஓடும்
அடியாழ திசையொன்று திறக்கிறது
உனக்கு குறி சொல்லும்
குறத்தியின் மஞ்சள் பூசிய முகம்
மரச் செப்பின் உயிருருவாய்
உன் ஆதி மரங்களின்
சேதி சொல்கிறது
அவள் குரலின் உளி
செதுக்குவது உன் தாய்நாளின்
அநாதி இசை மண்டபம்
அது எழுப்புவது
உன் இருப்பின் ஓசை
எனினும்
உயிருருவின் உட்புரி உனை
ஈர்ப்பதில்லை
சமீபத்தின் சம்பத்து உனை
சமைப்பதில்லை
அருவத்தின் அசல் உனை
அடைவதில்லை
