இனிக்கும் தமிழ் / டி வி ராதாகிருஷ்ணன்

இராமாயணம்

‘வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள் முகம்,
கண்டது ஓர் பொழுதினில், தெரியும்; கைதவம்
உண்டுஎனின், அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ?
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ?

எல்லோரும், வீபீஷணனை ஏற்றுக் கொள்ள கூடாது என்று சொல்லி விட்டார்கள்.
அனுமன் மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி அதற்காண காரணங்களை
கூறுகிறான்.

வஞ்சகர்களின் முகத்தை பார்த்த உடனேயே தெரிந்து விடும். அவர்களிடம்
வஞ்சகம் இருந்தால் அதை அவர்களால் மறைக்க முடியாது. பகைவர்கள் நம்மிடம்
வந்து தங்கள் நிலையை தாழ்த்திக் கொண்டு இருக்க விரும்புவார்களா ? (ஒரு
போதும் மாட்டார்கள் )

வீபீஷணனை எல்லோரும்தான் பார்த்தார்கள். அவர்களுக்கு, அவன் நல்லவன் என்று
தெரியவில்லை. வஞ்சகர்களை கண்டவுடன் அறிந்து கொள்ளலாம் என்று
கூறுகிறான்.அனுமன்.
அவன் அறிவின் விசாலம் அப்படி.

பொருள்

‘வண்டு உளர் = வண்டுகள் உள்ள
அலங்கலாய்! = மாலையை உடையவனே
வஞ்சர் = வஞ்சகர்களின்
வாள் முகம் = வஞ்சகம் பொருந்திய முகம்
கண்டது ஓர் பொழுதினில் = கண்ட ஒரு நொடியில்
தெரியும் = தெரிந்து விடும்
கைதவம் = வஞ்சகம்
உண்டுஎனின் = அவர்களிடம் இருந்தால்
அஃது = அது
அவர்க்கு = அவர்களுக்கு
ஒளிக்க ஒண்ணுமோ? = மறைக்க முடியுமா ?
விண்டவர் = பகைவர்கள்
நம் புகல் = நம்மிடம் புகலிடமாக
மருவி வீழ்வரோ? = தங்கள் நிலையை தாழ்த்திக் கொண்டு வாழ்வார்களா ?

கல்வியும், அறிவும் மனிதர்களை எடை போடும் ஆற்றலை தரும் என்பது இந்த பாடல்
தரும் செய்தி.