இருப்பின் சூத்திரம்/வசந்ததீபன்

மான்குட்டிகளின் பாதங்களில்
வனத்தின் சாந்தம்
விழித்திருக்கிறது.

இலைகளின் அசைவில்
மரத்தின் உயிர்
தரித்திருக்கிறது.

நீரின் சிரிப்பொலியில்
மண்ணின் மகிழ்ச்சி
ஒளிந்திருக்கிறது.

பறவைகளின் சிறகசைப்பில்
மேகங்களின் கனவுகள்
நிரம்பியிருக்கின்றன.

மலைகளின் கம்பீரத்தில்
நிலத்தின் உக்கிரம்
புதைந்திருக்கின்றது.

பல்லுயிர்களின் செழிப்பில்
பஞ்சபூதங்களின் இயக்கம்
அடங்கியிருக்கிறது.

வையகத்தின் வாழ்வில்
பிரபஞ்சத்தின் தோற்றுவாய்
திறந்திருக்கிறது.

🦀