குடை/எஸ் வி வேணுகோபாலன்

என் பாட்டனார் நினைவில் விரியும்
கறுப்புக் குடை
அவர் நிழலில்
என் இளமைப் பருவம்

பாட்டிக்கு
அவள் சேலைத் தலைப்பே குடை
அதற்குள் இறுக்கி
அணைத்து
அவள் நல்கிய நிழலில் என்
மீதிப் படிப்பு

வெயிலுக்கு
அசராத நடையாளர்
என் தந்தை
குடையெல்லாம்
பெரிய லட்சியமில்லை அவருக்கு
தொண்ணூறு கடந்து
வீசிய அவர் நிழல்
பேசிக் கொண்டிருக்கும் குடும்பங்கள்
அவர் மறைவுக்குப் பின்னும்

எனக்கான தனிக் குடைகள்
திரும்பக் காப்பாற்றி
எடுத்து வரும்
கவலையும் சேர்த்து விரித்தும்
மடித்தும் மறந்தும் துறந்தும்
போனதை விட
எப்போதும்
அவள் நனையாது
அவள் வாடிவிடாது
கைக்குள்
உயிர்க்கும் நிழலாய்
விரியும் காதலின் குடை இருக்கிறது
பத்திரமாக
இப்போதும்

13 Comments on “குடை/எஸ் வி வேணுகோபாலன்”

    1. மிக அருமை. பாட்டியின் புடவைக் குடையின் பாசப் போர்த்தல் அசத்தல்.
      நாம் குடை எடுத்துப் போனால் மழை வருவதில்லை.
      நாம் மறந்து போனால் மழை மறவாது தரை இறங்கும்.
      இப்போதெல்லாம் handbag ல் குடைக்கென்றே பிரிக்கப்பட்ட தனி அறைகள் உள்ளது. விரித்துப் பிரிப்பதற்குள் சாரல் நனைப்பதுமுண்டு.

      கவிதை அருமை சார்.

  1. குடைக்கம்பியின் உறுதியில் நைந்து, தொய்ந்து போன குடைத்துணியும் புதுப்பிக்கப் படும்.

  2. அருமை வேணு,. நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது உங்கள் கவிதைகள். ..குறுகிய நிமிடங்களில் மலர்ந்த அழகான குடை…பாராட்டுக்கள் .

  3. காதல் எப்படி குடையாகும் ?
    “காதல் சிறகை காற்றினில் விரித்து” சிறகாகும் போது குடை ஆகாதோ கொடையாக காதலை அளித்தவர்கள் மத்தியில் குடையாக காதலைத் தரும் வேணு தோழருக்கும் பெறும் ராஜி தோழருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  4. நீங்கள் பகிர்ந்த நாளன்றே படித்துவிட்டேன். நினைவலைகளை எளிய சொற்களால் அருமையான சித்திரமாக தீட்டிவிட்டீர்கள்.

  5. தோழர்,
    ஒரு பெரிய வெளியை சட்டென தரிசிக்க முடிந்தது.
    காலத்தை விரிக்கிறது கவிதை.
    கவிதைக்குள்ளிருந்து குடைகளாய் வந்து கொண்டு இருக்கின்றன
    எவ்வளவு குடைகள் நமக்கு!
    ஒவ்வொரு வெயிலுக்கும் ஒவ்வொரு குடைகள்.
    ஒவ்வொன்றாய் விரித்து அதற்குள் நின்று பார்க்கிறேன்.

Comments are closed.