ஆகாசம்/ப.மதியழகன்

எல்லாம் அதுதான்
மண்ணைப் பிளந்து வருவதும்
பனிக்குடம் உடைந்து வருவதும்
அதுதான்
தவழ்ந்து செல்லும் மேகமும்
அந்தரத்தில் சுழலும் கோள்களும்
ஆகாசத்தை சற்று
அண்ணாந்து பார்க்க வைக்கின்றன
ஒவ்வொரு முறை
வானம் பார்க்கும்போதும்
நான் புதிதாய்ப் பிறக்கிறேன்
வானம் விசாலமானது
விரிவடைந்து கொண்டே இருப்பது
எல்லாவற்றையும் விழுங்கும்
கடவுள் துகள் ஆகாசத்தில் தானே
இருக்கிறது
அறையை பிரகாசமாக்க
ஒரு அகல்விளக்கு போதும்
பெருவெடிப்பில் சிதறிப்போனவைதான்
பூமியும், சூரியனும், நட்சத்திரங்களும்
பரிதி முளைத்தவுடன்
பிரிய மனமில்லாமல்
விலகுகிறது இருள்
முழுநிலவு எத்தனை
பிறைகளைக் கடந்திருக்கும்
இந்த துக்ககரமான இரவு
என்னை துயர்மிகுவரிகளை
எழுத வைக்கிறது
சிலுப்பாடு வேதனை
தருமென்று யாரும்
சொல்ல வேண்டியதில்லை
இதோ இந்த நதி
இரவுப்பொழுதில் கூட
ஓய்வெடுப்பதில்லை
நதி சுயத்தை இழந்தால்தான்
கடலாக முடியும்!

One Comment on “ஆகாசம்/ப.மதியழகன்”

Comments are closed.