கம்பன் கவியமுதம்–34/வளவ. துரையன்

                                    

                     கழுநீர் வளர்க்கும் செந்நெல்

முட்டுஇல் அட்டில் முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர்நெடு நீத்தம்தான்
பட்ட மென்கமுகு ஓங்கு படப்பைபோய்
நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே [58]

[முட்டுஇல்=குறைபாடில்லாத; அட்டில்=சமையல் சாலை; நெட்டுலை=பெரிய உலை; நெடு நீத்தம்=உலை வடித்த கஞ்சி; படப்பை=சோலை; நாறு=நாற்றுகள்]

இப்பாடலைச் சுவைக்கும்போது “சோறு ஆக்கிய பெருங்கஞ்சி ஆறு போலப் பெருந்தொழுகி” என்னும் பழம் இலக்கியப் பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டில் அன்னதானக் கூடங்களில் சோறு வடிக்கிறார்கள். அப்போது கொட்டும் கஞ்சி ஆறு போலப் பெருகி வந்ததாம். இங்கே கோசல நாட்டிலும் அந்தக் காட்சியைக் காட்டுகிறன் கம்பன்.
எந்தக் குறைபாடும் இல்லாத சமையல் கூடங்களிலே கனத்த ஒலிகளுடன் பெரிய உலைகளிலே கொட்டுவதற்காக அரிசியைக் கழுவுகிறர்கள். அந்தக் கழுநீரைக் கொட்டுகிறார்கள். அது வெள்ளம்போல் ஓடுகிறது. அவ்வெள்ளமானது நீர்க்கரைகளிலே வளர்க்கப்பட்ட மெல்லிய கமுகுகள் ஓங்கி வளர்ந்துள்ள சோலைகளின் வழியே சென்று நடப்பட்ட செந்நெல் நாற்றுகளை வளர்க்கிறது.
பழம்பாடல் சோறு வடித்த கஞ்சியைக் காட்டியது என்றால் கம்பனின் பாடல் அரிசியைக் கழுவிய கழுநீரைக் காட்டுகிறது.