
கந்தர் அலங்காரம் – தலை எழுத்தை அழிக்க
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
சீர் பிரிச்சு பார்க்கலாம்
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
(சேல்பட்டு,மால்பட்டு,வேல்பட்டு,கால்பட்டு..அடடா…)
சேல் பட்டு – மீன்கள் துள்ளி விளையாடியதில்
அழிந்தது – அழிந்தது
செந்தூர் வயல் பொழில் – திரு செந்தூரில் உள்ள வயல்கள் (அவ்வளவு தண்ணி
இருக்குமாம் வயலில் , மீன் நீந்தும் அளவுக்கு)
தேன் கடம்பின் – தேன் வழிகின்ற கடம்ப பூ உள்ள
மால் பட்டு – மாலை பட்டு
அழிந்தது – அழிந்தது
பூங் கொடியார் மனம் – பெண்களின் மனம்
மா மயிலோன் – பெரிய மயில் மேல் உள்ள முருகன்
வேல் பட்டு – வேலினால்
அழிந்தது – அழிந்தது
வேலையும் சூரனும் வெற்பும் – காவலை உடைய சூர பத்மனின் கோட்டையும், மலையும்
அவன் – அந்த முருகனின்
கால் பட்டு – திருப் பாதம் பட்டு
அழிந்தது – அழிந்தது
இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின்
திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
எழுதப்பட்டிருந்த [‘விதி’ என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று

கந்தர் அலங்காரத்திலிருந்து இந்தப் பாட்டைப் பல முறை கேட்ட துண்டு. அர்த்தம் முழுவதும் தெரிந்து படிக்கும்போது இனிமை கூடுகிறது.
திரு டி. வி. ராதாகிருஷ்ணன் இலக்கிய த்திலிருந்து.
எடுத்து ஒவ்வொரு பாடலுக்கும் அர்த்தம் சொல்லி தினமும் எழுதுவது பாடலை ரசிக்க உதவுவதோடு படிப்பவர்கள்
தமிழறிவையும் அதிகரிக்கிறது. தெரியாத பற்பல சொற்களைக் கற்றுக் கொண்டேன்.
அவர் பணி தொடர வாழ்த்துக்கள்!
ஜான்னவி.