கம்பன் கவியமுதம்-37/வளவ. துரையன்

                            ஆடு மோத மின்னல் உண்டாதல்  

              துருவை மென்பிணை ஈன்ற துளக்குஇலா
              வரிமருப்பு இணைவன் தலை ஏற்றை வான்
              உருமிடித்தெனத் தாக்குறும் ஒல்ஒலி
                     வெருவிமால்வரைச் சூழ்மழை மின்னுமே               [63]

[துருவை=செம்மறி ஆடு; துளக்கு=அச்சம்; மருப்பு=கொம்புகள்; ஏற்றை=கடாக்கள்; வெருவி=அஞ்சி; வரை=மலை]

இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி பயின்று வந்துள்ளதாம். அதாவது இயற்கையாக நிகழும் நிகழ்வில் புலவன் தன் குறிப்பை ஏற்றிப் பாடுவதாகும். மின்னல் மின்னுகிறது அதற்குக் கம்பன் காரணம் கூறுகிறான்.

மென்மையான செம்மறி ஆடுகள் ஆண்குட்டிகளை ஈனுகின்றன. வரிகளைக்கொண்ட கொம்புகளை உடைய ஒன்றுக்கு ஒன்று சமமான அக்கடாக்கள் மேகத்தில் உண்டாகும் இடியோசை போல ஒலி உண்டாகும்படி மோதிக் கொள்கின்றன. அப்போது பேரொலி உண்டாகிறது. அந்த ஒலியைக் கேட்டு பெரிய மலையில் தங்கி உள்ள நீர் கொண்ட மேகங்கள், வாய் திறக்க அதனால் மின்னல் உண்டாகும்.

இப்பாடலிலும் திணை மயக்கம் உள்ளது. அதாவது செம்மறி ஆடு முல்லை நிலத்துக்கு உரியதாகும். மலை என்பது குறிஞ்சி நிலப்பொருளாகும். இப்படி இரண்டு திணைகள் இங்கு மயங்கி வந்துள்ளன.