இனிக்கும் தமிழ் – 109 /டி வி ராதாகிருஷ்ணன்

கந்தர் அலங்காரம் – வயதான காலத்தில்

சிறை படாத நீர் போல் காலம் கசிந்து கொண்டே இருக்கிறது.

நமக்கும் வயது ஏறும். படித்தது மறக்கும்.

நம் உடல் அவயங்கள் நாம் சொல்வதை கேட்காத காலம் வரும்.

அப்போது, முருகா, உன்னை வணங்கும் செயலன்றி வேறு ஒன்றும்

அறியேன்….

அருணகிரி நாதர்  சொல்கிறார்

மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.

மைவருங் – கருப்பான வண்ணம் (மை) வரும்

கண்டத்தர் – கழுத்தை உடையவர் (திரு நீல கண்டம்)

மைந்த – மைந்தனே

கந்தா – கந்தா

வென்று – என்று

வாழ்த்துமிந்தக் – வாழ்த்தும் இந்த

கைவருந் – கைகண்ட

தொண்டன்றி –  தொண்டைத் தவிர

மற்றறியேன் –  மற்றது ஏதும் அறியேன்

கற்ற கல்வியும்போய் – நான் கற்ற கல்வி எல்லாம் (மறந்து) போய்

பைவரும் -பைய வரும்

கேளும் – உறவினர்களும்

பதியுங் – ஊராரும்

கதறப்-கதறி அழ

பழகிநிற்கும் – எப்போதும் கூடவே பழகி நிற்கும்

ஐவருங் – ஐம்புலன்களும்

கைவிட்டு – நான் சொல்வதை கேட்காமல் என்னை கைவிட்டு

மெய்விடும் போது – இந்த உடலை விடும் போது

உன்னடைக்கலமே.-உன்னையே அடைக்கலமாய் கொண்டேன்