கு. மா. பா. திருநாவுக்கரசு
என்பா – 1:
பழம்பெருமை வாய்ந்த சுற்றுலாத் தலம்!
பலமாநிலத்தோர் வந்து பார்க்கும் இடம்!
வெகுபக்கம் கண்டுவர வாய்ப்பு இருந்தும்
மகத்துவமே அறியாத உள்ளூரார்!
என்பா – 2:
நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்!
எத்தனை கோணம்! எத்தனை பார்வை!
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
நந்தவனத்தில் ஓர் ஆண்டி!
என்பா – 3:
வாசகனின் பாராட்டற்ற எழுத்தாளனின் குமுறல்!
ரசிகனின் போற்றுதலற்ற பாடகனின் ஆற்றல்!
படைப்பாளியின் திறமறியாத உடையவளின் சலிப்பு!
தாகத்தைத் தணிக்காத தண்ணீர்.
என்பா – 4:
எங்கோநான் காணும்போது என்னைக் காண்கிறாய்!
உன்னைநான் நோக்கும்போது மண்ணைப் பார்க்கிறாய்!
காலின் நகக்கண்களால் புள்ளிகள் வைத்து,
கோலத்தை என்நெஞ்சில் வரைகிறாய்!
என்பா – 5:
எழுதுவதால் என்ன பயன் என்றறியேன்!
கணக்கெழுதி வணிகன்பின் கிழித்து எறிவான்!
கவிஞன்தன் இல்லமெங்கும் குப்பை சேர்ப்பான்!
அசிங்கத்தைத் துடைத்தெறிவாள் ஆயா!
