கம்பன் கவியமுதம்—40 வளவ. துரையன்

ஒன்றால் ஒன்று இல்லை

                கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்

சீற்றம் இல்லை தம் சிந்தை செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே [71]

[கூற்றம்=மரணபயம்; சீற்றம்=சினம்; இழிதகவு=தாழ்வடைவது.

இப்பாடலின் நயமே ஒன்று இல்லாததால் மற்றொன்று இல்லை என்பதாம். அதாவது கோசல நாட்டில் யாரிடமும் தீய செயல்கள் செய்கின்ற எவ்விதக் குற்றமும் இல்லை; அதனால் அவர்களுக்கு மரண பயமே இல்லையாம்; அவர்களின் உள்ளத்தில் நேர்மைக் குணமே இருக்கிறது; அதனால் அவர்களுக்குச் சினம் தோன்றுவதே இல்லையாம். அவர்கள் நல்ல அறச் செயல்கள் அன்றி வேறு செய்வதில்லை; அதனால் அவர்கள் மேலும் மேலும் உயர்வடைவதே அன்றித் தாழ்வடையதேஇல்லையாம். 
நாட்டில் தீய செயல்கள் செய்வதால்தான் மரண பயங்கள் தோன்றுகின்றன என்பது அக்கால நம்பிக்கை.