தந்தையும் மகனும் தினமும் ஸ்விக்கியில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மகனுக்கு திருமணம் ஆகி மருமகள் வர மூவருமாக ஸ்விக்கியில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
இரண்டு வருடங்கள் முன்பு தான் வாசலில் நட்டு பராமரித்து வரும் பூச்செடியில் இருந்து யாராவது பூ பறித்தால் கோபித்துக் கொள்ளும் ராணி, இன்று கையில் ரோஜா பூக்களை ஏந்திக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறாள், வெகுநாட்கள் கழித்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக.
தாமதமாக கோயிலுக்குச் சென்ற சங்கர், பூட்டப்பட்ட வாசல் இரும்பு கேட் வழியே உள்ளே உற்று நோக்கி இருகரம் கூப்ப, கர்ப்பக்கிரகத்தில் மெலிதாக ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் அம்மன் அவனை நோக்கி அபயக்கரம் காட்டினாள்.
தூங்கி எழுந்து சொடுக்கு கதைகள் எழுதிக் கொண்டிருந்த மனைவியை கை சொடுக்கி கூப்பிட்டு “காபி போடலையா” என்றான் கணவன்.