எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

சுண்டி சரிபார்த்த
அம்மாவின்
வீணையின் சுருதி போல
தெளிவு கூடி வந்த
கோடை மதியத்தில்
அம்மா இப்போதிருந்திருந்தால்
என்ன வயதாகியிருக்கும்
எனக் கணக்கிடத் தோன்றியது ஆனால்
நான் என்று ஏதுமில்லை
எனும்போது அம்மாவின்
வயதை எப்படி எந்த பற்பிடிப்புமற்ற
சக்கரம் கணக்கிடும்?
எந்த உந்திச்சுழி தொட்டு
நெடு வழி தாண்டி
இந்த உள்ளங்கை வெறுமைக்கு
வந்து சேரும் தொலை தூரம்
மீண்டும் வீணையின் தந்தியை
விரல் நுனி
தீண்டும் நொடியில்
பிறக்கும் ரீங்காரம்
அம்மா இதோ நான்
அம்மாவும் பிள்ளையும் வீணையும்
எப்போதும்
அரை நொடி வயதில்