தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்/ ஹரி வல்லபன்


பின் இரவில் கண்விழித்து
பூஜை அறையை அலங்கரிப்பாள்.
முகம் காட்டும் கண்ணாடியை
அங்கு எடுத்து வைப்பாள்..
பல்வகைப் பழங்கள், காய்கறிகள்
நாணயங்களென தட்டில்
பரப்பிவைப்பாள்.
விடிகாலையில் விளக்கேற்றிவிட்டு
எங்களை உறக்கத்திலிருந்து
எழுப்புவாள்.
எம் கண்கள் திறவாதபடி
பொத்தி பூஜையறைக்கு
அழைத்துச் செல்வாள்..
நிலை தடுமாறி நடக்கையில்
தாங்குவாள்..
பூஜையறையில் அமர்த்தி
கண்விழி பொத்திய கைகளை
விலக்கி , கண்ணாடியில்
எம் முகம் காணச் சொல்லுவாள்.
அவ்வருடம் நன்றாக இருக்கும்
என்பாள்..
ஆனால்,
அம்மாவிற்கு யார் அப்படியெல்லாம்
செய்வார்கள் என்று தோன்றியபோது
விடையும் கிடைத்தது..
எமது சந்தோஷத்தில்
தன் முகம் பார்த்தவள் அல்லவோ அவள்!

3 Comments on “தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்/ ஹரி வல்லபன்”

Comments are closed.