கம்பன் கவியமுதம்—43/வளவ. துரையன்

பழிப்பன, பழிப்பன

விதியினை நகுவன அயில்விழி பிடியின்
கதியினைநகுவன அவர்நடை கமலப்
பொதியினை நகுவன புணர்முலை கலைவாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம் [7
6]

[அயில்விழி=கூரியவிழி; பிடி=பெண்யானை; கதி=நடை; பொதி=மொட்டுகள்; கலை=பதினாறு கலைகள்]

இப்பாடலில் நகுதல் என்பதைப் பழித்தல் அல்லது இகழ்தல் என்ற பொருளில் கொள்ள வேண்டும். விதி என்பது இங்கே இலக்கண விதியைக் குறிக்கும். விதி என்பது ஒன்றுக்கு மற்றொன்றை உவமையாகக் கூறுதலாகும். ஆனால் இங்கே மகளிரின் விழிகளுக்கு எப்பொருளையுமே உவமையாகக் கூற முடியாமையால் அவை அவ்விதியையே பழிக்கின்றனவாம்.

அவர்களுடைய நடையானது பெண்யானையின் நடையைப் பழித்தனவாம். தமக்குள்ளே இடைவெளியின்றி நெருங்கி அமைந்துள்ள அவர்தம் முலைகள் தாமரை மொட்டுகளைப் பழித்தனவாம். அந்த மங்கையரின் முகமோ பதினாறு கலைகளுடன் வாழ்கின்ற சந்திரனையே பழித்தனவாம்.

தாமரை மொட்டுகள் மலர்தலும் கூம்புதலும் ஆகிய பண்புகள் ஏற்றவை. ஆனால் அவர்களின் முலைகளோ அப்பண்பைக் கொள்ளாததால் மொட்டுகள் உவமைக்கு ஏற்றவை அல்ல. சந்திரனுக்கும் வளர்தலும், தேய்தலும் ஆகிய குற்றங்கள் உள்ளன. மகளிரின் முகங்கள் மாற்றம் இல்லாதவையாம். எனவே சந்திரன் ஏற்ற உவமை இல்லையாம்.