இனிக்கும்  தமிழ் – 125/ – டி வி. ராதாகிருஷ்ணன்

சகலகலாவல்லி மாலை

பெரும் செல்வந்தராய் இருக்கும் ஒருவர், பின்னொரு காலத்தில் அனைத்தையும்
இழந்து வறுமையில் வாடலாம்.

அரசர்கள், ஆண்டியான கதைகள் ஏராளம்.

 ஒரு காலத்தில் பெரிய அறிவாளியாக இருந்த ஒருவன் பின்னொரு காலத்தில்
முட்டாளாக முடியாது.

“நேற்று வரை  கல்விமானாய் இருந்தவனிடம் கல்வி அறிவு இப்போது அகன்று
விட்டது என சொல்ல முடியுமா?”

ஒருமுறை கற்ற கல்வி ந்மமை விட்டு என்றும் அகலாது.

விவேக சிந்தாமணியின் கீழ்கண்ட பாடல் நாம் அறிவோம்.

கல்விச்செல்வம்

வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்

வேகாது வேந்த ராலும் கொள்ளத்தான்் இயலாது, கொடுத்தாலும்

நிறைவொழியக் குறைபடாது, கள்ளத்தார் எவராலும், களவாட

முடியாது, கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும்

பொருள்தேடி உழல்வ தென்னே.

செல்வம் சிதைந்து விடலாம். தொழில் தொடங்கினால், நட்டம் வந்து சேரலாம்.
அதனால் போட்ட முதலையும் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டி வரலாம்.
எவ்வளவோ பெரிய தொழில் அதிபர்கள், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை கூட
செய்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் யாராவது தாங்கள் பெற்ற கல்வி காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி
இருக்கிறார்களா?

குமா குருபரர் கூறுகிறார்

“சொல் திறமையும், பொறுமையுடன் கவனித்து பெறும் அறிவும் தந்து , கவி
இயற்றும் நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய். இலக்குமியின் அருள் கூட
(பொருள்) ஒரு காலத்தில் சிதைந்து போகலாம், ஆனால் நீ தரும் அறிவு என்ற
செல்வம் ஒரு காலமும் சிதையாது, சகலகலாவல்லியே” என்று சரஸ்வதியை போற்றி
பாடுகிறார்.

பாடல்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

பொருள்

சொல் விற்பனமும் = சொற்களை கையாள்வதில் திறமையும்

அவதானமும் = கவனமும்

கவி சொல்ல வல்ல = கவிதை சொல்ல வல்ல

நல் வித்தையும் = நல்ல வித்தையும்

தந்து = தந்து

அடிமை கொள்வாய் = என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொள்வாய்

நளின = அழகிய

ஆசனம் சேர் = ஆசனத்தில் இருக்கும் (செந்தாமரையில் இருக்கும்)

செல்விக்கு = செல்வத்துக்கு அதிபதியான இலக்குமிக்கு

அரிது = அரியதானது

என்று = என்று

ஒரு காலமும் சிதையாமை நல்கும் = ஒரு காலத்திலும் சிதையாமை நல்கும்

கல்விப்= கல்வி என்ற

பெரும் = பெரிய

செல்வப் பேறே  = செல்வதை பெரும் பேற்றை தருபவளே

சகலகலாவல்லியே = சகலகலாவல்லியே

சிதையாத செல்வத்தை தருவது இலக்குமிக்கு கடினம். செல்வம் சிதைந்தே தீரும்.

கல்வி அப்படி அல்ல.

ஆகவேதான் கல்விக்கு முதலிடம்.