அரூ இதழ் பேட்டியில் எஸ் ராமகிருஷ்ணன்

எழுதத் துவங்கிய நாட்களில் பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி காலை நாலு மணி வரை எழுதுவேன், பகலில் உறங்கிவிடுவேன். மதியம்தான் எழுவேன். பின்பு படிப்படியாக இரவில் எழுவதைக் குறைத்துக்கொண்டு காலை இரண்டு மணி நேரம், இரவு நான்கு மணி நேரம் என மாற்றிக்கொண்டேன்.

இப்போது எனக்கென ஓர் அலுவலகம் வைத்திருக்கிறேன். அங்கே போய் தினசரி எழுதுவேன். பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் எழுதுவேன். பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு. பிறகு வாசிப்பேன். மாலை நடைப்பயிற்சி செல்வேன். காலையில் யோகா செய்வேன். இரவில் ஓர் அயல்நாட்டுத் திரைப்படம் பார்ப்பேன். ஆண்டு தோறும் உலகத்திரைப்பட விழாக்களுக்குப் போய் வருவேன். கடந்த சில ஆண்டுகளாக நானே சில திரைப்பட விழாக்களின் நடுவராகப் பணியாற்றுகிறேன். ஆகவே நிறைய படங்களை இணையம் வழியே தனியே பார்த்துக்கொள்ள முடிகிறது. நல்ல படங்களை நண்பர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வாங்கி அனுப்பித் தருகிறார்கள். என்னிடமே பெரிய கலெக்சன் இருக்கிறது.

நிறைய பயணம் மேற்கொள்வேன். அதற்கென நாட்களை ஒதுக்கி வைத்துக்கொள்வேன். பயணத்தின்போது எதையும் எழுத மாட்டேன். பார்க்கிற விஷயங்களைக் குறிப்பு எடுத்துக்கொள்ள மாட்டேன்.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் என் அறையில் மட்டும்தான் என்னால் எழுத இயலும். வேறு ஒரு புது இடத்தில் என்னால் ஒரு வரி எழுத இயலாது. ஆகவே சினிமாவிற்கு எழுதும்போதுகூட ஹோட்டல் அறையில் எழுத மாட்டேன். என் அறையில்தான் என்னால் சுதந்திரமாக, நெருக்கமாக உணர முடிகிறது.

முக நூலில் விஷய தானம் செய்தவர் ஆர.கந்தசாமி