
கத்திரி வெயில்
வெளியே தலைகாட்ட முடியவில்லை
மனுசாளுக்கு வயதாகிவிட்டால்
நேரம் ஓடுவதே இல்லை
ஆயுளில் கால்பகுதியை
தூங்கித்தானே கழிக்கிறோம்
நாமெல்லோரும்
பணிஓய்வு பெற்றுவிட்டால்
வேதாளம் தோளில் அமர்ந்துகொள்கிறது
அன்றாடம் அசைபோட
ஏதாவது விஷயம்
வேண்டும் அதற்கு
போய்ச் சேர்ந்தா போதுமென்று
ஒரு பேச்சுக்கு சொன்னாலும்
இன்னும் வாழ வேண்டும் என்கிற
ஆசை யாரை விட்டது
வாலிபத்தில் வயோதிகத்தைப் பற்றி
அதிகம் யோசிப்பதில்லை
ஆனால் வயோதிகத்தில்
கடந்து சென்ற வாலிபத்தைப் பற்றி
அதிகம் யோசிக்கிறோம்
இப்போதெல்லாம் எல்லாம் விதி
என்று அலுத்துக்கொள்வது
வாடிக்கையாகிவிட்டது
நிலா தேய்ந்து வளர்வதில்லை
பிறை பார்த்து பண்டிகைகளை
முடிவு செய்வது
பூமியில் மட்டும்தான்!

யதார்த்தமான கவிதை. முதுமைக்கே உரித்தான கலக்கமான சிந்தனைகள். வாழ்விலும் விரக்தி, சாவைப் பற்றிய பயம்… இரண்டிலும் மாறி மாறி பயணிக்கும் இரண்டுங்கெட்டான் நிலையை எளிமையாகச் சொல்லியிருக்கும் பாங்கு கவர்ந்தது! வாழ்க, வளர்க. பாராட்டுக்கள்.🙏🙏🙏👏👏👏