ஐயப்பன் மாதவன் கவிதை

ஒரு மலரைப் பார்க்கிறபோது உன்னை நினைத்துக்கொள்கிறேன்
அது என் கைக்கெட்டும் தூரத்திலிருக்கிறது
அதை எதுவும் செய்யாமல்
கவனித்துக்கொண்டிருக்கிறேன்
அது காற்றில் மெல்ல அசைகிறது
உன் ஆடையைப் போல
அதன் விரிந்த இதழ்களில்
உன் புன்னகை மலர்கிறது
ஆழ்ந்துபோய் அதன் வசீகரத்தில்
வீழ்கிறேன்

அதனுடலில் உன்னுடல் காண்கிறேன்
ஆடையின்றி நிற்கும் அதனழகில்
நீ தெரிகிறாய்
தூண்டப்படும் காமத்தில்
என்னுடல் உருகி ஓடுகிறது

செய்வதறியாமல் உன்னைப் பறித்துவிட்டேன்
நீ என்னில் வந்துவிட்டாய்
மலரின் புனைவில்
இப்போது நீயில்லை அன்பே…

One Comment on “ஐயப்பன் மாதவன் கவிதை”

Comments are closed.