தோற்றால் வெல்லாம்/முருகு

எங்கும் எதிலும் எப்போதும்
‘எளிதில்’ வெல்லும் வெறியில்…

தீராப் பசியுடன் திரியும் பேராசை மனிதர் நாம்…

எவ்வளவு நிறைவடைந்தாலும்
இன்னும் கேட்கும் நம் இறுமாப்பு…

புத்தம் புது காலைப் பொழுதொன்றில்…
புத்தரைச் சந்தித்தேன் என் அகவெளியில்…

“அனைத்திலும் நான் வெல்ல
அரிய வழி ஒன்றை நான் அறிய…

அருள் புரிவாய்…
அமைதித் திருவுருவே…”

மந்தகாசப் புன்னகையுடன்
மௌனமாய் மகான் மலர்ந்தார்…

“எங்கும் எதிலும் எப்போதும் ‘நீ’
எளிதில் தோற்க வேண்டும்…

‘நீ’ தோற்றால் உனக்கு
நித்தமும் வெற்றி நிச்சயம்…”

One Comment on “தோற்றால் வெல்லாம்/முருகு”

Comments are closed.