சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்; கணிசமான அளவில் இத்துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் இந்த வளத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதிலே, எது வளம், எது வளமின்மை, என்று பார்ப்பதிலே, நமக்குள்ளே பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படையை வைத்துக்கொண்டு, ராஜாஜி, சாமிநாதய்யர் போன்றவர்களையும், கல்கி, கி. வா. ஜகந்நாதன் போன்றவர்களையும், புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி போன்ற சிறுகதை ஆசிரியர்களுக்குச் சமானமானவர்களாக மதிப்பிட்டுச் சொல்லும் பழக்கம் இன்று நமக்கு இருக்கிறது. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே ஒரு ‘தரத்தொகுப்பு’ நூலான ‘சிறுகதை மஞ்சரி’யிலே, கதைகளும் சிறுகதைகளும் (சோமு, சங்கர், அகிலன், ஜகந்நாதன், தூரன் முதலியவர்களுடையவை வெறும் கதைகள், புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, ஜானகிராமன் இவர்களுடையவை சிறுகதைகள்) இடம்பெற்றிருக்கின்றன. தொகுப்பாசிரியருக்கு கதைக்கும் சிறுகதைக்கும் உள்ள தாரதம்மியம் தெரியவில்லை என்பது வெளிப்படை.
கதை என்பது எத்தனையோ காலமாக, வழிவழி வந்த ஒரு சொத்து. (ஆனால்

அதற்கு இலக்கிய அந்தஸ்து சிறுகதையான பிறகுதான் ஏற்படும்). மஹாபாரதத்துக்கும், ராமாயணத்துக்கும் கதைதான் அடிப்படை. ஷேக்ஸ்பியரின் கவிதை நாடகங்களுக்கும் கதைதான் அடிப்படை. புறநானூறிலுள்ள பல செய்யுள்களுக்கும் கதைகள்தான் அடிப்படை. இது தவிர புத்தர் ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், பரமார்த்த குரு கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் இவையெல்லாம் கதைகள். இந்தக் கதைகளில் பலவும் ஆரம்பத்தில், ஆதி காலத்தில், இந்தியாவிலே தோன்றித்தான் உலகெங்கும் பரவின என்று சொல்லிப் பெருமைப்படுபவர்கள் உண்டு.
அழியாச்சுடர் இணையத்திலிருந்து

One Comment on “சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் – ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க.நா.சுப்ரமண்யம்”
Comments are closed.