
காதோரம் காற்று
ஏதேதோ சொல்லி விட்டுப்
போகிறது.
காற்றின் நிசப்தம்
கனக்கின்ற மௌனம்
காரணமேன் ?
அரையிருளில் வானம்
அடிவருடும் காற்று
மெலிதான தூறல்.
அரசமரத்தை அசைக்கும் காற்று
நாணலின் தலையைக் கோதிச் செல்கிறது .
உட்செலும் போது பிராணமாய்
வெளி வரும் போது கரியமிலமாய்
ஜாலம் காட்டுகிறது காற்று .
தென்றலாய் தீண்டும்
வாடையாய் வசீகரிக்கும்
புயலாய் புழுதி கூட்டும்
காற்று .
காட்டு மரங்களையே
ஆட்டுவிக்கும் காற்று
கண்ணுக்குத் தெரிவதில்லை .
பூட்டிய மனங்களைத் திறக்கும்
புனிதச் சாவி
காற்று .
குப்பையைக் கோபுரத்திலும்
அடுத்த நொடி அடித் தளத்திலும்
கொண்டு சேர்க்கும் காற்று .
உலகம் நினைக்கிறது
‘ நான் இல்லையேல் காற்று இல்லை ‘
காற்றுக்குத் தெரியும் உண்மைக் கதை .
ஒளி புக முடியா இடத்திலும்
இருள் புக முடியா தடத்திலும்
சரளமாய் நுழைவது காற்று .
கண்ணுக்குத் தெரியாதன
நம்ப மறுக்கும் உலகம்
காற்றை நம்பியே சுவாசிக்கின்றது .
காற்றின் தலைகோதல்
காணாத தலை
இருந்து என்ன பயன் ?
புயலுக்கான வரவேற்பை
வாசிக்கிறது
காற்றின் மௌனம் .
ஒலியாய்க் கேட்கும் காற்றை
விழியால் காண
விழைகிறது மனம் .

நல்ல கவிதை