கம்பனைக் காண்போம்—47/வளவ. துரையன்

                     உழவர் ஓசையில் இசை அடங்குதல்


மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை 
வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியும் மாயுமே                   [89]

[மூரி=நெருக்கி; நேர் தாக்கின்=நேரான குறுந்தடியால் தாக்குதல்; தண்ணுமை=மத்தளம்; மாயும்=அடங்கும்]

 கோசல நாட்டில் எழுப்பப்படும் இசைக்கருவிகளின் ஒலியை இப்பாட்டில் அறியலாம். மூக்கு போன்ற இடத்திலே வாய் வைத்து ஊதப்படுவது சங்கு. நேரான குறுந்தடியால் தாக்கப்பட்டு ஒலி எழுப்புவது பறை. வார் கொண்டு இறுகக் கட்டி இருப்பதால் அதிர்ந்து ஒலி எழுப்புவது மத்தளம்.

இப்படிப்பட்ட சங்கு. பறை, மத்தளம் ஆகியன எழுப்பும் ஓசைகளெல்லாம் அந்நாட்டின் உழவர்கள் தங்கள் உழவு மாடுகளை வாயினால் அதட்டி எழுப்பும் ஒலியில் அடங்கி விடுமாம். அதாவது அந்த வாத்தியங்களின் ஓசையை உழவர்கள் ஒலி அடக்கிவிடும் எனில் மாடுகளின் பெருக்கமும், அவற்றை அதட்டும் உழவர்களின் கூட்டமும் அறியப்படும். அதனால் உழவுத்தொழில் மேம்பட்டிருந்ததையும் அறியலாம்.