ஏன் எழுதுகிறீர்கள்?/அ.முத்துலிங்கம்

முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை பெற்றால் அது சாதாரண விசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும், இசையமைப்பாளர் புதிய இசையை உருவாக்குவதும் இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அதைப் படிக்கும் வாசகருக்கும் கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது தவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்கு ஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்!

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

சங்க இலக்கியம்தான். எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகியவற்றை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால், முறையாகப் பாடம் கேட்டதில்லை. நேற்று ‘மலைபடுகடாம்’ நூலை எடுத்துப் பார்த்தேன். எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஒரு புதிய தகவல் அங்கே கிடைக்கும். படிக்க வேண்டும்.

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

உயர்ந்த இலக்கியம் அதைச் செய்கிறது. தன் முதிய வயதில் டோல்ஸ்டோய் எழுதிய நீண்ட கதை The Death of Ivan Ilyich அறம் பற்றிப் பேசுவது. இவான் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். ஒருவருக்கும் தீங்கிழைக்காத சாதாரண வாழ்க்கை அவருடையது. அவர் விபத்தில் சிக்கிக் கீழே விழுந்து காயம்பட்டு தீர்க்க முடியாத நோயாளியாகப் படுக்கையில் படுத்துவிட்டார். மருத்துவர் அவரிடம் உண்மை பேசுவதில்லை. மனைவி வேண்டாவெறுப்பாக நடந்துகொள்கிறார். ஒருவரும் அவருக்கு உண்மையாக இல்லை, ஒரேயொரு வேலைக்காரனைத் தவிர. அவர் கடவுளைப் பற்றியும், வாழ்க்கையின் அர்த்தத் தைப் பற்றியும் அறத்தைப் பற்றியும் தன் இறுதிக் காலத்தில் சிந்திக்கிறார். வாசக மனங்களையும் உண்மையை நோக்கி நகர்த்துகிறார்.

  • த.ராஜன்,

முகநூலில் தகவல் : ஆர். கந்தசாமி