
மூன்று வயது பேரனுடன்
கடற்கரைக்குச் சென்றேன் ;
கரையோரக் கடையில்
சிறு பொம்மைக் கூடை
வாங்கிக் கொண்டான்!
மணலில் அமர்ந்தோம்;
கரையை முட்டி
விளையாடும் அலைகளைப்
பார்த்துக் கொண்டே
மணலை அளைந்து விளையாடினான்;
மணலில் விரவிக் கிடந்த
சிப்பிகளை பொறுக்கி
கூடையில் நிரப்பினான்;
தட்டியும் கொட்டியும்
இட்டும் விட்டும்
கூடைக்குள் சிப்பிகளை
கலகலக்க வைத்தான்;
அந்தி வானச் செம்மையை
முந்திருள் மடிக்குள் மூட,
“திரும்பலாமா? ” கேட்டேன் பேரனிடம்;
எழுந்தவன்
கூடையில் சேர்த்த சிப்பிகளை
மணலில் கொட்டினான்!
“வீட்டிற்கு கொண்டு போய்
விளையாடலாம் தானே! ” என்றேன்;
“தாத்தா!
சிப்பிகள் என்னோடதல்ல;
இந்த மணலோடது
என்று புன்னகைத்தான்!
மணலில் மிருதுவாய்
கால் பதித்து
என் விரல் பிடித்து நகர்ந்தான்!

அற்புதமான கவிதைகள்; பேரனையும் சேர்த்து.