முகநூலில் தகவல் : ஆர். கந்தசாமி
காரைக்குடியை அடுத்த கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனத்தை நடத்தியதால் ‘ரோஜா முத்தையா ஆனார்’. மற்றவர்கள் தேவை இல்லை என்று தூக்கி எறிந்ததை எல்லாம் ரோஜா முத்தையா வாங்கிச் சேகரித்தார். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான பழைய அரிய நூல்களைக் கிழித்துப் பலகாரம் கட்டியிருப்பார்கள். ஒருமுறை அவர் இப்படி எழுதி உள்ளார். ‘ எனது வாழ்க்கை, புத்தகம் தேடி இரவு பகல் என்று வித்தியாசமில்லாத உழைப்பாகவே அமைந்து விட்டது. அது என் பாக்கியம். பயனோ அளவற்றது. ஒரே ஆனந்த மயம். இறைவனின் அருட்கொடைகளில் கூட புத்தகமே மிக மிக மேலானது’
எதைத்தேடுகிறார்கள் என்பதுதான் பலரிலிருந்து சிலரை வேறுபடுத்திக் காட்டுகிறது. வங்கிக் கணக்கல்ல வாழ்க்கைக் கணக்கு என்ற புரிதலே ஒரு விடுதலைதான். கோணிப்பைகளில் நிறைத்தவர்களைப் புதைத்த இடத்தை புதல்வர்களே மறந்து விட்டார்கள். ஆனால், தமிழகத்தின் தலைநகரில்
ரோஜா முத்தையா பெயரில் ஓர் ஆகச்சிறந்த ஆய்வு நூலகம்.
ரோஜா முத்தையாவின் மறைவிற்குப் பிறகு அவரது சேகரிப்பை விலைக்கு வாங்கி அதைத் தமிழகத்திற்கே கொடையாகக் கொடுத்த சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு தமிழ்ச் சமூகம் எழுந்து நின்று கைதட்ட வேண்டும்.
-ஆர். பாலகிருஷ்ணன்
தமிழ் நெடுஞ்சாலை

