அவர் நினைவு நாள் செப்டம்பர் 12ஆம் தேதி

முகநூல் பதிவு : ஆர்.கந்தசாமி

சென்னையில், 1921ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி பின்னிரவு ஒன்றரை மணிக்கு உடல் நலக்குறைவால் பாரதியாரின் உயிர் பிரிந்தது. எனவே அவர் நினைவு நாள் செப்டம்பர் 12ஆம் தேதி தான் என்று அவரது எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி கூறுகிறார்.

சுப்பிரமணிய பாரதியை பற்றி மேலும் பகிர்ந்து கொண்ட அவர், பாரதியை நெஞ்சிலும் நினைவிலும் சிந்தனையிலும் தேக்கி வைத்திருப்போர் பலர் இருந்தாலும், என்னை அவர் தன் குருதியில் வைத்தது நான் செய்த நல்லூழ்.

இந்த நாளில் அவர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை நினைவு கூர விரும்புகிறேன். ஒருமுறை பாரதியாரும் அவர் மனைவி செல்லம்மாவும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்குச் சென்றார்கள். அப்போது, ஒரு கூண்டில் சிங்கம் இருந்ததைக் கண்ட பாரதியார் சற்றும் அஞ்சாமல் கூண்டுக்கருகே சென்று சிங்கத்தின் பிடரியைத் தடவிக் கொஞ்சத் தொடங்கிவிட்டார். இதைக் கண்டு அச்சத்தில் உறைந்த செல்லம்மா என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறினார். தத்தளித்தார்.

அவரைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. அதே சமயம், சிங்கத்தால் அவருக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடக்கூடாது என்கிற நியாயமான பயம் வேறு. செய்வதறியாது தவித்த செல்லம்மா இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். “தெய்வமே, சிங்கத்துக்காவது நல்ல புத்தி கொடு” என்று வேண்டிக் கொண்டார்.

மறுபுறம் பாரதியாரோ சிங்கத்தை நேருக்கு நேர் நோக்கி, “சிங்கமே நீ காட்டுக்கு ராஜா. நான் பாட்டுக்கு ராஜா” என்று நிமிர்வோடு சொன்னார். அதைக் கேட்ட சிங்கம் பாரதியின் கூற்றை ஆமோதிப்பது போல கம்பீரமாக ஒரு கர்ஜனை செய்தது. அது காற்றின் படிகளில் ஏறி எட்டுத் திக்கிலும் எதிரொலித்தது.

சிங்கத்துக்கு மட்டுமன்று, மரணத்தைக் கண்டு கூட அஞ்சாத ஒரு கவிச் சிங்கம் மகாகவி பாரதியார். சாதி மத பாகுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குதல், பெண்களை சமமாக மதித்து வாழ்தல், இயற்கை வளங்களைச் சுரண்டாது பராமரித்தல், தமிழ்மொழியை வளர்த்தல், வேற்றுமை இருந்தாலும் இந்தியன் என்பதில் ஒற்றுமை கொண்டு நாட்டை தலைநிமிரச் செய்தல், எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்தல் என பாரதியாரின் கொள்கைகளை நம் வாழ்வில் செயல்படுத்துவதே அவருக்கு நாம் செலுத்தும் மெய்யான அஞ்சலி என்று நிரஞ்சன் பாரதி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது ”சமயம் தமிழ்” இணையதளத்திற்கு பாரதியாரின் எள்ளுப்பேரன் அளித்த பிரத்யேகப் பகிர்வு என்பது குறிப்பிடத்தக்கது.