பா.செயப்பிரகாசம் கடைசிப் பேட்டி…..

பா.செயப்பிரகாசம் தன்‌ மகனுக்கு நேற்று காலை அனுப்பிய‌ கடைசி நேர்காணலில் இருந்து சிறு பகுதி.

  1. உங்களுக்கு இதுவரை நிறைவேறாத ஆசை என எதுவும் உண்டா?
    எழுத்தாளனாக போதுமான பங்களிப்பினைக் செய்ய இயலாது போயிற்று என்ற ஏக்கம்.
  2. இப்போது நீங்கள் 80தைக் கடந்திருக்கிறீர்கள். வயது மூப்பு பற்றி உங்கள் அபிப்ராயம்?
    முதுமை வருமெனத் தெரியும். ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு வகையாய் நடனம் நிகழ்த்தும் என்பதும் அறிவேன். நடுத்தர வயதில் இதுபற்றி தீவிரமாகச் சிந்ததில்லை. ஆயினும் பாலியம், இளமை, நடுத்தர வயதுப் பருவங்களை சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், ஆற்றிய காலமாக நிறைவு கொள்ள முடியும்.

ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம் கட்டளை. முதுமை வந்து சேர்ந்த பின்னர், நம்மீது உடலின் கட்டளை. உடல் உபாதைகள் முழுமையாக ஆக்கிரமிக்கின்றன. இந்த முற்றுகைக்குள் மாட்டுப்பட்டு முதியவர்கள் அதற்குள் இயங்க அனுமதிக்கப் பட்டவர்களாகிறார்கள். பல்செட், ஹியரிங் எய்ட், பர்வைக்கண்ணாடி, இடுப்பு பெல்ட், முட்டிக்கட்டு (Knee Cab), ஊன்று கோல் – எத்தனை உபகரணங்கள்! உபகரணங்களின் துணயினால் முதுமையின் உடல் இயக்கம் நடக்கிறது.
“நேத்து வரைக்கும் நல்ல நெருக்கம். இன்னைக்கு இல்ல” என்றாற் போல இது.

உடலின் தாளங்களுக்கு ஏற்ப இசைப்பவர்களாக மாறிவிடுகிறோம். இப்போது நாம் சுயமான இசைக்கலைஞர் அல்ல.

“இனி இந்த மனிதனில் கவிதை இல்லை” என மலையாளக் கவிஞர் சுகதமாரியின் நீண்ட துயரமான புல்லாங்குழல் இசை வருகிறது. அது எனது இசையாகவும் கேட்கிறது.
“இனி இந்த மனதில் கவிதை இல்லை…”
மணமில்லை தேனில்லை இனிமையில்லை.
இனி இந்த மனதில் கனவுகளும் பூக்களும்
மழையும் விடியலும் மீதமில்லை;
அழகில்லை, பூப்போல் கையணைக்க-
அனுராகமில்லை, கண்ணீருமில்லை,
விரகமும் அச்சமும் சுமூக மோகங்களும்-
நோவும் குற்றஞ் சுமத்தலும் முற்றுமில்லை…
இனி இந்த மனதில் கவிதையில்லை…

இருண்ட மனதில் இனி பண்டிகையில்லை –
சிரிப்பில்லை, களிப்பில்லை, சிறகுமில்லை –
மலர் தேடி ஓடும் மலைச்சரிவில்-
…………. ……. ……….
…………….. ………. …….
வளைந்த இலவமரக் கொம்பில் கட்டிய ஊஞ்சலில்
ஆட்டமில்லை, பாட்டமில்லை.
இனி இந்த மனதினில் கவிதை இல்லை”
மலையாளம் – சுகதகுமாரி: தமிழில் – இளம்பாரதி.
என்ன செய்யலாம்? எதிர்கொள். முதுமையைக் கொண்டாடு என்கிறார் சுகுதகுமாரி.
நானும் அவ்வாறே எதிர்கொள்வேன்.

  1. மரணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    முதுமையை நாம் எப்படி எதிர்கொளவது என்பதில் ஒரு தீர்மானமிருப்பின், மரணத்தை எதிர் கொளவது என்பதிலும் ஒரு திட்டம் உண்டாகும். முதுமை என்பது – அரை மரணம்.

எந்தச் சடங்கும், சாஸ்திரமும், சம்பிரதாயமும் சொந்த வாழ்க்கைக்குள் நுழையாமல் பார்த்துக்கொண்டவர் கி.ரா; சாதி, மதச் சழக்குகளுக்குள் வாழ நேர்ந்ததைத் தவிர, வேறெந்தப் பாவமும் அறியாதவர். பிரகடனப் படுத்திக்கொள்ளாத பகுத்தறிவாளர்.
மரணம், மரணத்தின் பின்னான செயல்கள் பற்றி கி.ரா.தெளிவான பார்வையை முன்வைத்துள்ளார். மரணச் சடங்கு, சாங்கியம் – என்பவை பற்றிய அவரது நோக்கினை இது வெளிப்படுத்துகிறது.
“நான் என்ன சொல்றேன்னா, ஒரு மனுசன் இறந்து விட்டால் நீங்க போகாதீங்க. அவங்க வீட்டில இருக்கிறவங்களே அடக்கம் பண்ணிக்கிடுவாங்க. நான் இறந்து போனால் கூட யாரும் வராதீங்க. நீங்க செய்ய வேண்டியது என்னன்னா சத்தமே கேட்கக் கூடாது. இந்தக் கண்ணாடிப் பெட்டியில் வச்சி அழுவது, மாலை போடறது எதுவும் பண்ணாதீங்க. நான் இறந்து போய்விட்டேன் என்றால், இறந்து போனதற்கான மரணச் சான்றிதழ் வாங்கணும். அப்புறம் இது சந்தேகமில்லாத மரணம்னு ஒரு சான்றிதழ் வாங்கணும். அவ்வளவுதான். மறுநாள் பாலுக்குப் போறது, இதெல்லாம் வேண்டாம். சாம்பலைக் கூட வாங்காதீங்க. அதைக் கொண்டுபோய் கடலில் கரைப்பது எதுவும் வேண்டாம். அதுபோல் அஞ்சலிக்கூட்டம், அனுதாபக் கூட்டம் எதுவும் நடத்தாதீங்க. போட்டோ வச்சு மாலை போடாதீங்க. சிலை வைக்காதீங்க. ஞாபகார்த்தமா எதுவுமே வேண்டாமென நான் சொல்றேன். மரணத்தில் முக்கியமா படம் எடுக்காதீங்க. படம் எடுத்து என்ன பண்ணப் போறீங்க. பொணத்துக்குப் பக்கத்தில இருந்து போட்டோ எடுத்து என்ன பண்ணப் போறீங்க. நம்ம செய்கைக்கு ஒரு நல்ல காரணம் இருக்கணும்”
(நேர்காணல் : தளம் காலாண்டிதழ்; சனவரி- மார்ச் 2016.)
இதுதான் என் பார்வையும்.
ஒவ்வொரு செய்கைக்குப் பின்னாலும் ஒரு சரியான காரணம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறவன் நான்.

வாழும்காலத்தில் கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த கொள்கை வீரர்களும் பகுத்தறிவாளர்களும், சாவுக்குப்பின் உறவுகளால், குடும்பத்தால், நட்புகளால் சாதி, மதக் குறியீடுகளுடன் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இறப்பின் பின் என்ன நடக்கிறது எனக் கண்காணிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைப்பதில்லை. அவர் கடைப்பிடித்த கொள்கைக்கு இப்போது நடத்துகிற சடங்குகள் எத்தனை பெரிய அவமானத்தினை உண்டாக்கும் என்பதை இருப்பவர்கள் உணரவேண்டும். ஒருவருக்கும் அந்த உணர்த்தி இல்லாததால் “எனது இறுதி அடக்கம் நான் விரும்புகிறபடியே அமையவேண்டும்” என மரண ஆவணம் வரைந்து, பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்கிற செயல்முறை சிந்தனையாளர்கள் பெருகிவருகிறார்கள். நானும் அது போலப் பதிவு செய்து கொள்ள நினைக்கிறேன்.

One Comment on “பா.செயப்பிரகாசம் கடைசிப் பேட்டி…..”

  1. மரணம் மற்றும் மரணத்திற்கு பின்னான சடங்குகள் குறித்து மிக மிக வித்தியாசமான கண்ணோட்டம்.
    மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

Comments are closed.