29.12.2023 – வெள்ளிக் கிழமை
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: உங்கள் ஸ்டால் புத்தகக் கண்காட்சியில் சௌகரியமான இடத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறதே?
அழகியசிங்கர் : ஆமாம். நேற்று புதுப் புத்தகங்கள் எல்லாம் அச்சடித்து வந்து விட்டன.
ஜெகன் : எத்தனை அடித்தீர்கள் என்று நான் கேட்கப் போவதில்லை.
மோகினி : கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு அனுபவம் கூடிக்கொண்டு போகிறது. உங்களுக்குப் பெரிய கற்பனை எதுவுமில்லை.
அழகியசிங்கர் : உண்மைதான். எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எழுதியவற்றை நான் அச்சடிக்கிறேன். லாபம் சம்பாதிக்கும் நோக்கமில்லை.
மோகினி : சென்னை புத்தகக் காட்சியில் உங்களுக்கு எவ்வளவு விற்பனை ஆகும்.
அழகியசிங்கர் : இரண்டு லட்சம் தொடுவது கூடக் கடினமாகக் இருக்கும். ஏகப்பட்ட கடைகள்.
ஜெகன் : ஏன்?
அழகியசிங்கர் : எல்லோரும் போட்டிப் போடும் இடமாக இருக்கும்.
ஜெகன் : நீங்கள் வாங்கிக் குவிக்கும் புத்தகங்கள், நீங்கள் விற்பனை செய்யும் புத்தகங்களை விட அதிகமாக இருக்கும். அழகியசிங்கர் : உண்மைதான்.
மோகினி : உங்கள் மலையாள மொழிபெயரப்பு என்ன ஆயிற்று?
அழகியசிங்கர் : எம்ஒயு கையெழுத்துப் போட்ட மாத்ருபூமி பத்திரிகைக் கண்டு கொள்ள வில்லை. ஆனால் எனக்கோ மற்ற மொழிகளில் என் எழுத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஏன் வெறியாகக் கூட மாறி விட்டது. ஆனால் எதுவும் நடக்காது என்றால் என்ன செய்ய முடியும்.
மோகினி : க.நா.சு கவிதைகள் முழுவதும் கொண்டு வந்து விட்டீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : நான் கொண்டு வந்த புத்தகங்களில் அதுதான் திருப்திகரமான புத்தகம். ஞான ரதம் பத்திரிகையில் அவர் எழுதிய பல கவிதைகளைச் சேர்த்திருக்கிறேன்.
ஜெகன்: இன்று பேச்சை முடித்துக்கொள்ளலாமா?
அழகியசிங்கர். இரவு 11 மணி ஆகிவிட்டது. முடித்துக் கொள்ள வேண்டும்தான். உங்கள் இருவருக்கும் நல்ல இரவாக இருக்கட்டும்.
(இரவு 11 மணிக்கு)